ADDED : ஜூலை 18, 2026 12:41 AM

மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசின் கடற்கரையை ஒட்டிய பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 15.2 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தை தொடர்ந்து, அதன் மையத்தில் இருந்து 300 கி.மீ., தொலைவிற்குள் அமைந்துள்ள கடற் கரையில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து, கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உடனடியாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் வரை உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
