நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர், தாய்லாந்து: 154 பேர் பலி: உதவிக்கு ஐ.நா., தயார்
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர், தாய்லாந்து: 154 பேர் பலி: உதவிக்கு ஐ.நா., தயார்
UPDATED : மார் 29, 2025 06:50 AM
ADDED : மார் 28, 2025 12:50 PM
முழு விபரம்

சகாய்ங்: மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் 154 பேர் உயிரிழந்து உள்ளனர். தாய்லாந்தில் கட்டடங்களுக்கு மத்தியில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.
மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. பிறகு 4.8 ஆக உணரப்பட்டது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், கோல்கட்டாவிலும் வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
தாய்லாந்து
குறிப்பாக, தாய்லாந்தின் பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டிட இடுபாடுகளில் 80 ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதேபோல, பல இடங்களிலும் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை கட்டுமானத்தில் உள்ளவை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாங்காக் நகரில் வானுயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து நிலநடுக்கம் காரணமாக தண்ணீர் மேல் இருந்து கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.
150 பேர் பலி
இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் 150 பேர் உயிரிழந்து உள்ளனர். 750க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மண்டலே நகரில் உள்ள மசூதியில் இருந்தவர்களும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மின்சாரம் துண்டிப்பு
மியான்மரில் பல இடங்களில் நிலநடுக்கம் காரணமாக பல மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
உதவி கோரும் மியான்மர்
கட்டடங்கள் சேதம்
மியான்மரின் மண்டலே நகரில் உள்ள பல கட்டடங்கள் சேதமடந்துள்ளன. இரண்டு மாடி கட்டடம் ஒன்று சரிந்து பக்கத்து வீட்டின்மேல் விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. பழைய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்து உள்ளது. அதேபோல் தலைநகர் நயிபிடாவ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால், அங்கிருந்த பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
மியான்மர் தாய்லாந்து எல்லையில் உள்ள புத்தமத வழிபாட்டு தலங்கள் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளன.இரு நாடுகளிலும் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஐ.நா., தகவல்
மியான்மருக்கு உதவி செய்வதற்கு தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து வருவதாக ஐ.நா., பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று மியான்மரில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என எச்சரித்து உள்ளது.
மியான்மரின் மத்திய பகுதியில், இந்த நிலநடுக்கம் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
வெளியேற உத்தரவு
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வாழ பாதுகாப்பற்றதாக கருதப்படும் கட்டடத்தில் வாழும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அணைகள் குறித்து கவலை
நிலநடுக்கத்தால் மியான்மரின் அணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்து உள்ளது.
இந்திய தூதரத்தின் அவசர உதவி எண்கள்
தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள், அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தை +66 618819218 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள சூழ்நிலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.
பிரதமர்உறுதி
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கவலையளிக்கின்றன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன். அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இதற்காக, எங்களின் அதிகாரிகளை தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, இரு நாடுகளுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்,' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.