ADDED : டிச 28, 2024 04:13 AM
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பீட்சா டெலிவரி செய்ய வந்த பெண், டிப்ஸ் குறைவாக தந்த காரணத்தினால் கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒஸ்சியோலா கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ரிவேரோ என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு, கர்ப்பிணி ஒருவர் தன் ஆண் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, 5 வயது மகளுடன் கடந்த 22ம் தேதி தங்கியிருந்தார்.
அப்போது அவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக, பீட்சா ஆர்டர் செய்தனர். பீட்சாவை, பிரியன்னா அல்வேலோ என்ற பெண் டெலிவரி செய்தார். அவருக்கு டிப்ஸாக, 171 ரூபாயை கர்ப்பிணி தந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த டெலிவரி பெண் கர்ப்பிணியை முறைத்து பார்த்தபடி சென்றுவிட்டார். சற்று நேரத்தில் முகமூடி அணிந்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் கர்ப்பிணி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தனர். மகளை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணியை, முகமூடி நபர்கள் 14 முறை சரமாரியாக குத்தினார்.
அவரை ஹோட்டல் நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், கர்ப்பிணியை கத்தியால் குத்தியது டெலிவரி பெண் என்பது தெரிய வந்தது. டிப்ஸ் குறைவாக கொடுத்த ஆத்திரத்தில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டெலிவரி பெண் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

