அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி: 100 சதவீத வரி விதிப்பில் பின் வாங்கிய அமெரிக்கா
அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி: 100 சதவீத வரி விதிப்பில் பின் வாங்கிய அமெரிக்கா
ADDED : அக் 27, 2025 08:29 AM

வாஷிங்டன்: தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நவ., 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார். ஏற்கனவே சீனப் பொருட்களுக்கு, 30 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலில் உள்ள நிலையில், தற்போது அறிவித்த வரிவிதிப்பால் 130 சதவீதமாக வரி உயர்வு அடைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு, சமீபத்தில் சீனா அறிவித்துள்ள அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம் என 100 சதவீத வரி அறிவித்த அமெரிக்கா முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார்.
இந்த சூழலில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இது குறித்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் நீங்கி விட்டது.
சீன துணை பிரதமர் உடன் நாங்கள் இரண்டு நாள் சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்தினோம். சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

