ADDED : ஜன 07, 2026 06:41 PM

வாஷிங்டன்: டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உடன் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி வருகிறார். அதற்கு டென்மார்க் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கடந்த 3 ம் தேதி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா ராணுவம் பிடித்துச் சென்றது. இதனையடுத்து டிரம்ப்பின் அடுத்த குறி கிரீன்லாந்தாக இருக்கும் எனக்கூறப்பட்டு வந்தது.
இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் பாதுகாப்பு ரீதியாக கிரீன்லாந்து இப்போது மிக முக்கியப் புள்ளியாக இருக்கிறது. கிரீன்லாந்து முழுவதும் ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் உள்ளன . அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தப் பகுதியை அமெரிக்கா உடன் இணைப்பது அவசியம் என்றார்.
இதனையடுத்து ஐரோப்பிய தலைவர்களான பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், இத்தாலிபிரதமர் மெலோனி, போலந்து பிரதமர் டஸ்க், ஸ்பெயின் பிரதமர் சான்செஸ், பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கெயிர்மர் உள்ளிட்டோர் டென்மார்க்கிற்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில் அவர்கள், கிரீன்லாந்து உள்ளிட்ட டென்மார்க் பிராந்தியம் நேட்டோ அமைப்பின் ஒரு அங்கம்.கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான விஷயங்களில் முடிவு செய்வது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் உரிமை, அவர்கள் மட்டுமே அதனை செய்ய முடியும் எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முக்கியமான வெளியுறவு கொள்கை இலக்கை அடைய அதிபரும், அவரது குழுவினரும் பல்வேறு வாய்ப்புகளை ஆலோசித்து வருகின்றனர். மேலும், அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்துவது என்பது அதிபர் வசம் உள்ள விருப்பமாகும். கிரீன்லாந்தை கையகபடுத்துவது தேசிய பாதுகாப்பு முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது.

