அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்
UPDATED : பிப் 12, 2025 08:19 PM
ADDED : பிப் 12, 2025 07:02 PM

மார்செய்ல்ஸ்: பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இதற்காக, மார்செய்ல்ஸ் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 2 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து பேச இருக்கின்றனர். குறிப்பாக, இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தற்போது, அமெரிக்காவின் முக்கிய இரு வர்த்தக நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

