கேரள பாதிரியாருக்கு கவுரவம்; கார்டினலாக நியமனம்; பிரதமர் மோடி ஏற்பாட்டால் இந்தியக் குழு வாடிகன் செல்கிறது
கேரள பாதிரியாருக்கு கவுரவம்; கார்டினலாக நியமனம்; பிரதமர் மோடி ஏற்பாட்டால் இந்தியக் குழு வாடிகன் செல்கிறது
ADDED : டிச 06, 2024 11:32 AM

புதுடில்லி : கேரள பாதிரியார் ஒருவர் மிக மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் தலைமையில் ஒரு குழு வாடிகன் செல்ல பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்துள்ளார். இது கிறிஸ்தவ சமூகத்தின் மக்களுக்கு மிக பெரிய கவுரவம் என பாராட்டை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்து உத்தரவிடப்படும்.
இந்த முக்கிய கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியை சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி நாளை (டிச.7) வாடிகனில் நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க இந்திய குழுவினர் செல்ல பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். இதன்படி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்பி சதம்சிங் சாந்து, பாஜ., வை சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன், ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர்.
' கார்டினல் பொறுப்பேற்பு நிகழ்வில் இந்திய அரசு சார்பில் ஒரு குழுவினர் பங்கேற்பது , கிறிஸ்துவ சமூகத்திற்கு கிடைத்த பெரும் மரியாதை ஆகும். மேலும் இந்தியர்களை இது கவுரவப்படுத்துகிறது. இந்த ஏற்பாட்டை செய்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. ' இவ்வாறு வாடிகன் செல்லும் குழுவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.