ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2 ஆயிரத்தை தாண்டியதாக அதிகாரிகள் தகவல்
ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2 ஆயிரத்தை தாண்டியதாக அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 13, 2026 09:05 PM

டெஹ்ரான்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால், அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தீவிரமடைந்து தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையை ஈரான் நிறுத்தாவிட்டால் அமெரிக்க ராணுவம் தலையிட வேண்டியிருக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.மேலும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாளுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த போராட்டத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டிவிடுவதாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அதிபர் மசூத் பெஷேஸ்கியான் குற்றம்சாட்டி உள்ளார். அந்த நாடுகளின் ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் என கமேனி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், ஈரான் அதிகாரிகள் கூறுகையில், இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கும். பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பின்னால் பயங்கரவாதிகள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பாதுகாப்பு படையினர் எத்தனை பேர், பொது மக்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

