ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா
ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா
ADDED : ஏப் 19, 2025 10:23 PM

மாஸ்கோ: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இன்று( ஏப்.,19) இரவு முதல் ஞாயிறு இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவித்து உள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இதனை சமாளித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.
இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது. ஆனால், இதில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால், சமரச முயற்சியில் இருந்து விலகப் போவதாக அந்நாடு அறிவித்து உள்ளது.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக புடின் பிறப்பித்த உத்தரவில், '' சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதல் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நிறுத்தப்படுகிறது. இதனையே உக்ரைனும் பின்பற்றும் என நம்புகிறேன். அதேநேரத்தில், இதனை மீறி உக்ரைன் செயல்படும் நேரத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் படைகளை ராணுவ தளபதி தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் புடின் கூறியுள்ளார்.

