தண்டனையில் இருந்து புடின் தப்பக்கூடாது: மரணமடைந்த நாவல்னி மனைவி ஆவேசம்
தண்டனையில் இருந்து புடின் தப்பக்கூடாது: மரணமடைந்த நாவல்னி மனைவி ஆவேசம்
UPDATED : பிப் 17, 2024 05:36 PM
ADDED : பிப் 17, 2024 03:03 PM

மாஸ்கோ: ‛‛ ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால், அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள் '' என அலெக்சி நாவல்னியின் மனைவி யூலியா நாவல்னயா கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக யூலியா நாவல்னயா கூறியதாவது: எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடம் இருந்து வந்துள்ளதால், அதில் சந்தேகம் உள்ளது. புடின் மற்றும் அவரது அரசை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் பொய்யைத்தான் சொல்வார்கள். ஒருவேளை அந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் புடின், அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், அவரது அரசு எனது கணவருக்கு செய்த அனைத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அந்த நாள் விரைவில் வரும், எனது கணவர் நாவல்னி சிறையில் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால், புடினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம்
இதனிடையே, அலெக்சி நாவல்னி மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நாவல்னிக்கு ஆதரவாக இங்கிலாந்திலும் போராட்டம் நடந்தது.