ADDED : ஆக 07, 2025 03:43 PM

புதுடில்லி : ''ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார்'', என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச்சூழ்நிலையில் நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா கிளம்பி சென்றுள்ளார்.
மாஸ்கோவில் நிருபர்களைச் சந்தித்த அஜித்தோவல் கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார். இதற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அநேகமாக புடின் ஆகஸ்ட் மாதம் வர வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தோவல் மேலும் கூறியதாவது : இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவில் ஆலோசனை நடந்தது. புடினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக நினைக்கிறேன் எனக்கூறினார்.