ADDED : அக் 26, 2025 07:22 PM

பீஜிங்: பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
சீனத்தலைநகர் பீஜிங்கில் இந்திய துாதரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்பாடு செய்திருந்த, இந்திய தத்துவ மரபுகளின் சங்கமம் என்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரபல சீன சிற்பி யுவான் சிகுன் செதுக்கியிருந்தார்.
சீனாவிற்கான இந்திய தூதர் பிரதீப் ராவத், தாகூரின் மார்பளவு சிலையை திறந்து வைத்து கூறியதாவது: ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தாகூரின் சீனா பயணம் நமது நாகரிக உரையாடலில் ஒரு மைல்கல். உலகளாவிய மனிதநேயம் பற்றிய தாகூரின் செய்தியும், சூ ஜிமோ மற்றும் லியாங் கிச்சாவோ போன்ற சீன அறிஞர்களுடனான அவரது நட்பும் இரு நாடுகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.இவ்வாறு பிரதீப் ராவத் கூறினார்.

