அயர்லாந்தில் தொடரும் இனவெறி அட்டூழியங்கள்; மேலும் ஒரு இந்தியர் மீது சரமாரி தாக்குதல்
அயர்லாந்தில் தொடரும் இனவெறி அட்டூழியங்கள்; மேலும் ஒரு இந்தியர் மீது சரமாரி தாக்குதல்
ADDED : ஆக 13, 2025 04:31 PM

டப்ளின்: அயர்லாந்தில் மேலும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.
அயர்லாந்தில், கடந்த சில வாரங்களில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பல கடுமையான தாக்குதல்கள் நடந்து உள்ளன. ஜூலை 19ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த 40 வயதான அமேசான் ஊழியர் ஒருவர், டப்ளினின் டல்லாஹ்ட்டில் ஒரு டீனேஜ் கும்பலால் தாக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, 32 வயதான சந்தோஷ் யாதவ் டப்ளின் அபார்ட்மெண்டிற்கு அருகில் ஆறு இளைஞர்களால் தாக்கப்பட்டார், இதனால் அவருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அதுமட்டுமின்றி, ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கியது.
இந்நிலையில், அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் இந்தியர் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் சம்பவத்தில், பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக அந்த இந்திய இளைஞர் கூறியதாவது:
நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு குழுவை சேர்ந்த நபர் எனது வயிற்றில் உதைத்தார். நான் நடந்து செல்ல முயன்றபோது, மேலும் இருவர் என்னைத் தாக்கத் தொடங்கினர். பின்னர் நான் தரையில் விழுந்தேன், அவர்கள் என்னை உதைத்து குத்துவதைத் தொடர்ந்தனர்.
அவர்களில் ஒருவர் தனது தண்ணீர் பாட்டிலை எடுத்து என் கண்ணுக்கு மேலே அடித்தார். அந்த இடத்தில் பலர் கூடியிருந்தனர். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இருப்பினும், இரண்டு ஆண் இளைஞர்கள் உதவி செய்து போலீசாரை அழைத்தனர். நான் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள், 'இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன' எனதெரிவித்தனர்.
அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.