கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காங்கோவில் 13 பேர் பலி
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காங்கோவில் 13 பேர் பலி
ADDED : ஜன 26, 2025 11:51 PM

கோமா: காங்கோவில் முக்கிய நகரத்தை கைப்பற்ற முயன்ற எம் - 23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் இடையிலான மோதலில், ஐ.நா.,வின் அமைதி காக்கும் குழுவினர் உட்பட 13 பேர் பலியாகினர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. எம் - 23 குழு, அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
காங்கோ ராணுவத்தில் இருந்து வெளியேறி, தனி அமைப்பாக செயல்படும் எம் - 23க்கு, அண்டை நாடான ருவாண்டா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது.
காங்கோ ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.
காங்கோவுக்கு உதவும் விதமாக ஐ.நா.,வின் அமைதி காக்கும் குழு அங்கு முகாமிட்டுள்ளது. தென்னாப்ரிக்கா நாட்டு வீரர்கள் தலைமையிலான இந்த குழுவில், பிற நாட்டினரும் உள்ளனர்.
இந்நிலையில், காங்கோவின் கோமா நகரை கைப்பற்றும் முயற்சியில் எம் - 23 படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்திய இந்தக் குழு, தற்போது கோமா நகர எல்லையை முற்றுகையிட்டுள்ளனர். இவர்களை, மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்த காங்கோ ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
அவர்களுக்கு உதவியாக ஐ.நா., தரப்பில் அனுப்பப்பட்டுள்ள அமைதி குழுவைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் இறங்கினர். காங்கோ ராணுவம் மற்றும் எம் - 23 படையினர் இருவரும் மாறி மாறி குண்டு மழைகளை பொழிந்ததால், கோமா நகரத்தின் எல்லைகள் போர்க்களமாக மாறின.
இரண்டு தினங்களுக்கு மேலாக நீடித்த போரின் முடிவில், ஐ.நா.,வின் அமைதி குழுவினர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு மழையை சமாளிக்க முடியாமல், எல்லைகளில் வசித்த ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு உடைமைகளுடன் கோமா நகரின் மத்திய பகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.