ADDED : ஜன 28, 2026 01:55 AM

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையால் காட்டுத்தீ தீவிரமாக பரவுவதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு மீட்புப் படையினர் உத்தரவிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் கடும் வெப்ப அலையால், அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காட்டுத் தீயுடன், கடுமையான வெயிலும் வதைப்பதால் மக்கள் புழுக்கத்தில் திணறுகின்றனர்.
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்ன் நகரில், மிக உயர்ந்த அளவாக 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வடமேற்கு மல்லி பிராந்தியத்தில் உள்ள சில நகரங்களில், 49 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி, முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
வி க்டோரியா மாகாணத்தில், 2009ல் 173 பேரை பலி கொண்ட பிளாக் சார்ட்டர்டே காட்டுத்தீக்கு பின் ஏற்பட்ட மிக மோசமான இந்த வெப்ப அலை, மாகாணத்தின் சில பகுதிகளில் எரியும் தீயின் அபாயத்தை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தற்போது 6 இடங்களில் பற்றி எரிந்து வரும் தீயானது, மூன்று இடங்களில் கட்டுப்பாட்டை மீறி இருப்பதாக அம்மாகாண தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், ஓட்வேஸ் பகுதியில் 25,000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
மூன்று கட்டடங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக பணியாற்றியும், வெப்பமான வானிலை மற்றும் வெப்பநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட பலத்த காற்றினால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது என அவர் மேலு ம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காட்டுத் தீ பரவி வரும் பகுதியில் வசிக்கும் 1,100 வீடுகளுக்கு தீயணைப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 10,000 மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக, அப்பகுதியை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். விக்டோரியா மாகாணம் முழுதும் நெருப்பு மூட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஏற்பாட்டாளர்கள், கடும் வெப்பம் காரணமாக வெளி மைதான போட்டிகள் நிறுத்தப்பட்டு சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. சில முக்கிய போட்டிகள் மைதானங்களின் மேற்கூரைகள் மூடப்பட்டு நடத்தப்படுகின்றன.

