ADDED : டிச 04, 2025 06:23 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10 முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார். இதை தடுக்க, 'ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2024' என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை துவங்கவோ, பயன்படுத்தவோ முடியாது. இது, வரும் 10 முதல் அமலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸி., அரசு எச்சரித்துள்ளது. 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, 'டிக்-டாக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ஆஸி., அரசு, புதிய கணக்கு துவங்குவோரின் வயதை சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியது.
இந்த சட்டத்தை பின்பற்றி, பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ருமேனியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளன.

