ADDED : பிப் 13, 2026 01:13 AM

மாஸ்கோ: உலகளவில் பிரபல மான 'வாட்ஸாப்' மற்றும் 'டெலிகிராம்' செயலிகளுக்கு ரஷ்யாவில் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'வாட்ஸாப்' செயலியை, ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த செயலிக்கு தடை விதிப்பதாக ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், ''மெட்டா நிறுவனம் ரஷ்ய சட்டங்களை பின்பற்ற மறுத்ததால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
''தகவல் தொடர்புக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, 'மேக்ஸ்' என்ற அரசு ஆதரவு பெற்ற செயலியை மக்கள் பயன்படுத்தலாம்,'' என்றார்.
ரஷ்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதேபோல் டெலிகிராம் செயலியும் அங்கு முடக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

