இந்தியாவின் இழப்பை ஈடுகட்டும் ரஷ்யா மருந்து, வேளாண் பொருட்கள் வாங்க முடிவு
இந்தியாவின் இழப்பை ஈடுகட்டும் ரஷ்யா மருந்து, வேளாண் பொருட்கள் வாங்க முடிவு
ADDED : அக் 04, 2025 01:24 AM

மாஸ்கோ:அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அதிக வேளாண் மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது.
நட்புறவு தெற்கு ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள சோச்சியில் நடைபெற்ற வால்டாய் சர்வதேச விவாத மன்றத்தில், இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த புவியியல்சார் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் எந்த பிரச்னைகளும் இருந்ததில்லை. சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் இருந்தே ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல நட்புறவு, வர்த்தக உறவு இருந்து வந்துள்ளது.
பல்வேறு முக்கிய பிரச்னைகளில் பேச்சு நடத்தி எங்கள் நிலைப்பாடுகளை கவனமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி தன் நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்கும் தொலைநோக்குடைய ஒரு புத்திசாலி தலைவர். நம்பத்தகுந்த நண்பர்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதும், இந்தியா அதை புறக்கணித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இறக்குமதி இதனால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள், ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் சமன் செய்யப்படும். மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, இந்தியா கவுரவம் பெறுகிறது.
இழப்பை ஈடுகட்ட, இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான வழிமுறைகள் குறித்து சிந்திக்குமாறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்ய அதிபர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம், இந்தியா- ரஷ்யா இடையே பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.