ADDED : செப் 26, 2025 01:52 AM
மாஸ்கோ:ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை விதித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.
சமீபத்தில், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்பு தளங்கள் மீது உக்ரைன் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள், பாஷ்கோர்டோஸ்டான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள முக்கிய எண்ணெய் தளங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, நாடு முழுதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரீமியா உட்பட பல பிராந்தியங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.