வெனிசுலா ராணுவ தளத்தை சல்லடையாக்கிய அமெரிக்கா; வெளியானது சாட்டிலைட் படங்கள்!
வெனிசுலா ராணுவ தளத்தை சல்லடையாக்கிய அமெரிக்கா; வெளியானது சாட்டிலைட் படங்கள்!
UPDATED : ஜன 04, 2026 10:41 PM
ADDED : ஜன 04, 2026 10:38 PM

கராகஸ்: வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்யும் போது, அமெரிக்க ராணுவம் தாக்குதல்
நடத்துவதற்கு முன்பும், பின்பும் கராகஸில் உள்ள ராணுவ தளத்தின்
செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
போதை கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா அதிபர் மதுரோவை நேற்று நள்ளிரவில் அமெரிக்கப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அவருடைய மனைவியும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு டிரம்புக்கு சவால் விட்ட நிலையில், பல முறை மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைக்குப் பிறகு, மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவாளிகளின் மூலம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் போடப்பட்ட திட்டத்தின் மூலம், கராகஸில் அமைந்துள்ள ராணுவ தளமான புர்டே டியுனா மீது தாக்குதல் நடத்தி, ஆப்பரேஷனை கனகச்சிதமாக அமெரிக்க கமாண்டோ படையினர் செய்து முடித்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத், கராகஸில் அரை மணிநேரத்தில் 7 வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், இந்த ஆப்பரேஷனில் 150க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் டிரம்ப்,'அமெரிக்கப் படைகள் ஆப்பரேஷனை கடும் இருளில் மேற்கொண்டது. அப்போது, தலைநகர் கராகஸ் முழுதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. எங்களிடம் இருந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகரின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. அனைத்தும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் படைகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, ஆப்பரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தன,' எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்யும் போது, அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பும், பின்பும் கராகஸில் உள்ள ராணுவ தளத்தின் செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.

