ஹஜ் யாத்திரை அடையாள அட்டை: புதிய விதிகளை அறிவித்தது சவுதி
ஹஜ் யாத்திரை அடையாள அட்டை: புதிய விதிகளை அறிவித்தது சவுதி
UPDATED : டிச 08, 2025 12:38 AM
ADDED : டிச 08, 2025 12:12 AM

ரியாத்: சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், 'நுஸுக்' அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான சவுதியில் உள்ள மெக்காவுக்கு மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் வருகின்றனர். இதற்காக யாத்ரீகர்களுக்கு, 'நஸ்க்' என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. யாத்திரை சேவைகளை மேம்படுத்தும் விதமாக இந்த அடையாள அட்டையை நவீனமயமாக்க சவுதி முடிவு செய்துள்ளது.
ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, 'நுஸுக்' அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு, 'மொபைல் போன்' வாயிலாக டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அச்சிடப்பட்ட வடிவிலும் அட்டை வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுதும் யாத்ரீகர்கள் எப்போதும் தங்கள் உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ நுஸுக் அட்டையை உடன் வைத்திருக்காத யாத்ரீகர்களுக்கு, சவுதி அரேபிய அதிகாரிகள் வாயிலாக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சேவைகள் மறுக்கப்படலாம். எனவே, அனைத்து யாத்ரீகர்களும் இந்த விதிக்கு கண் டிப்பாக கட்டுப்படுவது அவசியம் என, இந்திய ஹஜ் குழுவும் அறிவுறுத்தியுள்ளது.

