சத்தியமா சொல்றோம்; ஹசீனா குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா
சத்தியமா சொல்றோம்; ஹசீனா குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா
UPDATED : ஆக 13, 2024 06:35 AM
ADDED : ஆக 13, 2024 06:22 AM

வாஷிங்டன்: தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக, ஷேக் ஹசீனா கூறிய குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் மறுத்துள்ளார்.
வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ‛வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அமெரிக்கா காரணம்' என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருந்தார்.
வன்முறை
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எங்களுக்கும், வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய். அரசின் எதிர்காலத்தை வங்கதேச மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அடக்குமுறை
ஹசீனா அரசு எடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைதான், போராட்டத்தை தீவிரப்படுத்தியது. ஷேக் ஹசீனா அரசு மாணவர்களை கடுமையாக ஒடுக்கியது. வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இடைக்கால அரசு எடுக்கும் முயற்சிகளை உன்னிப்பாக கவனிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

