தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய இந்தியர்களை கவுரவித்த சிங்கப்பூர் அரசு
தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய இந்தியர்களை கவுரவித்த சிங்கப்பூர் அரசு
ADDED : ஏப் 12, 2025 11:45 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், தீ விபத்தில் சிக்கிய சிறுவர் - சிறுமியரின் உயிரை காப்பாற்றிய இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை, அந்நாட்டு அரசு கவுரவித்து உள்ளது.
சிங்கப்பூரில், ரிவர் வேலி சாலையில் உள்ள சமையல் பள்ளி ஒன்றில், கடந்த 8ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
இதில், ஜனசேனா தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின், 8 வயது மகன் மார்க் சங்கர் பவனோவிச் உட்பட, 20க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் சிக்கினர்.
சிறுவர் - சிறுமியரின் அலறல் சத்தத்தை கேட்ட, அருகில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு பேர், சற்றும் யோசிக்காமல், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஜன்னல் அருகில் சிறுவர் - சிறுமியர் அழுகையுடன் நிற்பதை பார்த்த தொழிலாளர்கள், உடனடியாக ஏணியை கொண்டு வந்து பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்புப் படையினர் வரும் வரை காத்திருக்காமல், தங்களின் உயிரை பணையம் வைத்து, 10 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், தீ விபத்தில் சிக்கிய சிறுவர் - சிறுமியரின் உயிரை காப்பாற்றிய இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன், சிவசாமி விஜயராஜ் ஆகியோருக்கு, மனிதவள அமைச்சகத்தின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டு குழுவிலிருந்து, நாணயங்களை அளித்து சிங்கப்பூர் அரசு கவுரவித்துள்ளது.