பாகிஸ்தானுடன் கடற்படை கூட்டுப்பயிற்சி இந்தியா எதிர்ப்பால் ரத்து செய்தது இலங்கை
பாகிஸ்தானுடன் கடற்படை கூட்டுப்பயிற்சி இந்தியா எதிர்ப்பால் ரத்து செய்தது இலங்கை
ADDED : ஏப் 20, 2025 12:17 AM
கொழும்பு: இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தானுடன் மேற்கொள்ள இருந்த கடற்படை கூட்டு போர் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அரசு வழங்கிய போது, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், சீன போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்தன.
கவலை
இதுதவிர, பாகிஸ்தான் உடனும் இலங்கை உறவு பாராட்டியதோடு, அந்நாட்டு ராணுவத்துடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில், நம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கடந்த 5-ல் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.
ஆண்டுதோறும், இலங்கையின் கடல்பகுதியில், பாகிஸ்தான் கடற்படையுடன் இணைந்து இலங்கை கடற்படையினர் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்த பயிற்சி நடக்கும் என்பதால், இந்த ஆண்டும் பாகிஸ்தான் கடற்படை போர் கப்பலான, 'பிஎன்எஸ் அஸ்லட்' கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது.
கொழும்பு அருகே, கடற்பகுதியில், 'பாசெக்ஸ்' எனப்படும் இரு நாட்டு போர்க் கப்பல்களின் அணிவகுப்பு ஒத்திகையும் நடந்தது. ஆனால், திட்டமிட்டபடி திரிகோணமலையில் கூட்டுப்பயிற்சி நடக்கவில்லை.
பிரதமர் மோடி, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது பயணத்துக்கு முன், பாகிஸ்தானுடன் போர் பயிற்சி நடத்தும் முடிவுக்கு, கொழும்பில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, இலங்கை அரசிடம் இந்தியா கவலையை வெளிப்படுத்தியது.
மேலும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா இணைந்து மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மையத்தை திரிகோணமலையில் தான் அமைக்கிறது. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில், இந்த திட்டம் துவக்கப்பட்டது.
கடன் உதவி
இதுதவிர, 35 ஆண்டுகளுக்குப் பின், இலங்கையுடன் ராணுவ ரீதியிலான ஒப்பந்தங்களையும் இந்தியா போட்டுள்ளது. ஏராளமான கடன் உதவியையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியது.
இதனால், மோடியின் வருகைக்கு சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் கடற்படையுடன் நடக்க இருந்த கூட்டு போர் பயிற்சியை இலங்கை கடற்படை ரத்து செய்தது. இது தொடர்பாக, இருதரப்புமே எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், சத்தமின்றி நிறுத்தியுள்ளன. இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.