இந்திய- - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சி : திரிகோணமலை துறைமுகப்பகுதியில் மும்முரம்
இந்திய- - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சி : திரிகோணமலை துறைமுகப்பகுதியில் மும்முரம்
ADDED : செப் 19, 2011 11:41 PM

கொழும்பு: இந்திய, இலங்கை கடற்படைகள் மிகப் பெரிய அளவில், கூட்டுப் பயிற்சியைத் துவக்கியுள்ளன.
திரிகோணமலை துறைமுகப் பகுதியில் நடக்கும் இப்பயிற்சி ஒரு வாரம் நீடிக்கிறது. இந்திய, இலங்கை ராணுவங்களுக்கிடையே நடக்கும் வழக்கமான கூட்டுப் பயிற்சியின் ஒரு அங்கமாக, இரு நாட்டுக் கடற்படைகளும் நேற்று முன்தினம் முதல், மிகப் பெரியளவில் தங்கள் கூட்டுப் பயிற்சியைத் துவக்கியுள்ளன. இலங்கையின் திரிகோணமலை துறைமுகப் பகுதியில் நடக்கும் இப்பயிற்சி, இம்மாதம் 24ம்தேதி வரை நீடிக்கிறது. இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இலங்கைக் கடற்படை செய்தித் தொடர்பாளர் கோசால வர்ணகுல சூரியா, 'இந்தக் கூட்டுப் பயிற்சியின் மூலம், இரு கடற்படைகளுக்கிடையிலான உறவுகள் பலப்படும். இந்தப் பயிற்சிக்கு 'எஸ்.எல்.ஐ.என்.இ.எக்ஸ்., 2' எனப் பெயரிடப்பட்டுள்ளது' என்றார். இப்பயிற்சியில், இலங்கை கடற்படையின் இரு கடல் ரோந்து கப்பல்கள், ஏவுகணை தாங்கிய சிறிய ரக கப்பல் ஒன்று, சிறிய ரக ஆயுதம் தாங்கிக் கப்பல்கள் இரண்டு, ஆறு போர்க் கப்பல்கள் ஆகியவை பங்கேற்கின்றன. இந்தியக் கடற்படையின் ஒரு போர்க்கப்பல், எதிரிக் கப்பல்களைத் தாக்கும் கப்பல் ஒன்று, சிறிய ரக ஆயுதம் தாங்கிக் கப்பல் ஒன்று, பீரங்கிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று, விரைவுத் தாக்குதல் கப்பல்கள் இரண்டு, ஒரு கடல் ரோந்து கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.

