UPDATED : ஆக 08, 2024 04:04 AM
ADDED : ஆக 08, 2024 01:27 AM

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி சார்பில், அவரது மகன் நமல் ராஜபக்சே, 38, போட்டியிடுகிறார்.
நம் அண்டை நாடான இலங்கையில், 2019ல் நடந்த அதிபர் தேர்தலில், எஸ்.எல்.பி.பி., எனப்படும், இலங்கை மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 2020ல் நடந்த பார்லி., தேர்தலில், இலங்கை மக்கள் முன்னணி வென்றதை அடுத்து, பிரதமராக, மஹிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார்.
கொரோனா காரணமாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததை அடுத்து, கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை, மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். தொடர்ந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன், இலங்கை அதிபராக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து, அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்ற இலங்கை தேர்தல் கமிஷன், 'செப்., 21ல் அதிபர் தேர்தல் நடத்தப்படும்' என, சமீபத்தில் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 15ல் துவங்கவுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதே போல், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை மக்கள் முன்னணி சார்பில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.,யுமான நமல் ராஜபக்சே, 38, போட்டியிட உள்ளதாக, அக்கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லண்டன் சிட்டி பல்கலையில் சட்டப் படிப்பு படித்த நமல் ராஜபக்சே, 2010 முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை எம்.பி.,யாக உள்ளார். மேலும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.