தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் மட்டுமே முடியும்: சொல்கிறார் நமல் ராஜபக்சே
தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் மட்டுமே முடியும்: சொல்கிறார் நமல் ராஜபக்சே
ADDED : ஜன 08, 2026 10:36 PM

கொழும்பு : தெற்காசிய நாடுகளில் அமைதி திரும்ப இந்தியாவின் தலையீடு முக்கியம் என்று இலங்கை எம்.பி.,யும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் அரசியல் குழப்பங்கள், மக்கள் போராட்டங்கள், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இதை சுட்டிக்காட்டி, இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேயின் மகனும், எம்.பி.,யுமான நமல் ராஜபக்சே, சமூக வலைதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பயங்கரவாதம், பொது அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களால் தெற்காசியாவில் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கான அவசரத் தேவை உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்தல், அரசியல் வன்முறையைத் தடுத்தல், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவை கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு தெற்காசியாவில் அதிக ஒருங்கிணைப்பு தேவை. இதில் இந்தியாவின் தலைமைத்துவம் முக்கியமானது. இந்தியா முயன்றால் மட்டுமே, தெற்காசியாவில் அமைதியும், ஒற்றுமையும், வளர்ச்சியும் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நமலின் இந்த அறிக்கை, இந்தியா - இலங்கை இடையேயான உறவு சமீப காலமாக வலுவடைந்துள்ள நிலையில் வெளியாகியுள்ளது. கடந்த 2022ல் இலங்கை, பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா நிதி உதவி, கடன் வசதி வழங்கியது. கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயல் பாதிப்பிலும் இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது.

