தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பதை ஏற்க முடியாது; எலான் மஸ்க்கிற்கு ஜெர்மனி அதிபர் கண்டனம்
தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பதை ஏற்க முடியாது; எலான் மஸ்க்கிற்கு ஜெர்மனி அதிபர் கண்டனம்
ADDED : ஜன 21, 2025 10:14 PM

பெர்லின்: ''ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. அதற்காக, தீவிர வலதுசாரியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, அந்நாட்டு அதிபர் ஸ்கால்ப் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஜெர்மனி அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஜெர்மனி அதிபரான ஸ்கூல்சை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஓலப் ஸ்கோலஸ் கூறியதாவது: ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. கோடீஸ்வரர் ஆக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, விரும்பியதை பேசலாம். ஆனால், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பது என்றால், அதனை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.