UPDATED : மே 21, 2025 10:26 PM
ADDED : மே 21, 2025 04:07 AM

டாக்கா : நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
ஆரம்பத்தில் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமன் இடையே சுமூக உறவு இருந்தது. யூனுசுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ராணுவ தளபதியிடம் ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
தற்போது ராணுவ தளபதி ஜாமன் உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்க யூனுசுக்கு அழுத்தம் தருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசரக் கூட்டத்தை கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “யூனுஸ் விரைவில் தேர்தலை அறிவிக்க வேண்டும் என ராணுவ தளபதி விரும்புகிறார். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய வெளிநாடுகளின் தலையீடு காரணமாக வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற தன்மை அவரின் மிகப்பெரிய கவலையாக உள்ளது,” என்றார்.