UPDATED : அக் 23, 2024 09:46 PM
ADDED : அக் 23, 2024 07:58 PM

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அங்காராவில் உள்ள விமான நிறுவன தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடந்தது. இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த இடத்தில் பெரும் புகைமூட்டமாக காணப்படுகிறது. சம்பவ இடத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால், அந்த இடம் கலவரப்பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ்., பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, அந்த பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் உலா வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

