பயங்கரவாத அச்சுறுத்தலை சகித்துக் கொள்ளக்கூடாது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
பயங்கரவாத அச்சுறுத்தலை சகித்துக் கொள்ளக்கூடாது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2025 10:18 PM

கோலாலம்பூர்: '' பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது,'' என மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
எரிசக்தி வர்த்தகம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தைகள் சிதைக்கப்படுகின்றன. கொள்கைகள் பாரபட்சமாக அமல்படுத்தப்படுகின்றன. கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டியது இல்லை.
புதிய சூழ்நிலைகளுக்கு உலகம் தவிர்க்க முடியாமல் எதிர்வினையாற்றுகிறது. சமரசம் செய்யப்படுகிறது. தொழில்நுட்பம், போட்டித்தன்மை, சந்தை அளவு, டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றின் யதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. பன்முகத்தன்மை வளரவும் செய்யும். இவை அனைத்தும் தீவிரமான உலகளாவிய கலந்துரையாடலுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நமது தற்காப்பு உரிமையை எப்போதும் சமரசம் செய்ய முடியாது.
ஆசியான் கடல்சார் பாரம்பரிய விழாவை குஜராத்தின் லோத்தல் துறைமுகத்தில் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்கிறோம். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த மாநாட்டையும் நடத்த தயாராக இருக்கிறோம்.
கடந்த மார்ச் மாதம் மியான்மரில் பூகம்பம் ஏற்பட்ட போது, இந்தியா முதல் நாடாக உதவி செய்தது. இந்தியா- மியான்மர் - தாய்லாந்து நெடுஞ்சாலை திட்டம் வளர்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் செயல்படும் சைபர் மோசடி மையங்களால் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் எங்களுக்கு கவலை உள்ளது.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
ஆஸி., பிரதமருடன் சந்திப்பு
இம்மாநாட்டுக்கு இடையே ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இதன் பிறகு ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மோடெகி தோஷிமிட்சுவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

