நைஜரில் பயங்கரவாத தாக்குதல்; இந்தியர்கள் இருவர் கொலை; ஒருவர் கடத்தல்!
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்; இந்தியர்கள் இருவர் கொலை; ஒருவர் கடத்தல்!
ADDED : ஜூலை 19, 2025 06:29 PM

புர்கினா: தென்மேற்கு நைஜரில் கட்டுமான தளத்தில், நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், அங்கு பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. டாசோ என்ற பகுதியில், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மற்றொரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நைஜரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நைஜரின் டாசோ பகுதியில் நடந்த ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒருவர் கடத்தப்பட்டார். இந்த துயரமான சம்பவத்தால் வருத்தம் அடைந்தோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறந்தவர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு கொண்டு செல்லவும், கடத்தப்பட்ட இந்தியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். நைஜரில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.