UPDATED : நவ 21, 2024 09:36 PM
ADDED : நவ 21, 2024 07:05 PM

கராச்சி: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயணிகள் வேன் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
பாராச்சினார் பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் வேன் சென்று கொண்டு இருந்தது. அதற்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனமும் சென்றது. குர்ரம் பகுதியில் அந்த வாகனங்களை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். முதலில் போலீஸ் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பிறகு வேன் மீது இரு புறங்களில் இருந்தும் சுடத் துவங்கினர்.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 38 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

