அன்புக்குரிய ஊழியர்களே...ஆதலினால் காதல் செய்வீர்: தாய்லாந்து கம்பெனி தாராளம்
அன்புக்குரிய ஊழியர்களே...ஆதலினால் காதல் செய்வீர்: தாய்லாந்து கம்பெனி தாராளம்
ADDED : செப் 05, 2024 01:45 PM

பாங்காக்: தாய்லாந்து மார்க்கெட்டிங் கம்பெனி, தங்கள் ஊழியர்கள் காதலியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்கு வசதியாக, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்துள்ளது. ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்த இந்த செய்தி, காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தாய்லாந்து, பாங்காக்கில் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் ஒருவர், 'எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். டின்னர் சாப்பிட கூட ஒன்றாக வெளியே போக முடியவில்லையே' என தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் முதலாளி வரை சென்றுவிட்டது. இதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை குஷிப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் லீவு வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு.
தேவையான நாட்கள் லீவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. உங்கள் நலனே எங்கள் நலன், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
'எங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், காதலியுடன் டேட்டிங் செல்லவும் இந்த விடுப்பை பயன்படுத்தலாம்' என அந்நிறுவனம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.