உலகில் 3 பேருக்கு அரிய வகை ரத்தம்: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
உலகில் 3 பேருக்கு அரிய வகை ரத்தம்: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ADDED : டிச 11, 2025 03:42 AM

பாங்காக்: தாய்லாந்தில், மனித ரத்தத்தின் ரகசியங்களை ஆராயும் விஞ்ஞானிகள் உலகில் மூன்று பேருக்கு மட்டுமே, அரிதிலும் அரிதான ரத்த வகை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சிரிராஜ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், 5.44 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
அவர்கள் பரிசோதனைகளின் போது, பொதுவான 'ஏ','பி','ஓ' ஆகிய ரத்தக் குழு அமைப்பில் ஏற்படும் சிறு மாறுபாடுகளை ஆராய்ந்தனர்.
அப்போது 0.15 சதவீத நோயாளிகள் மற்றும் 0.03 சதவீத ரத்த கொடையாளர்களின் ரத்த மாதிரிகளில் வித்தியாசங்கள் தென்பட்டுள்ளன.
அந்த மாதிரிகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, ஒரு நோயாளி மற்றும் ரத்த தானம் செய்த இரண்டு பேருக்கு, 'பி(ஏ)' என்ற அரிய ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பி' ரத்த வகையின் கலப்பு வடிவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரத்த வகைகள், ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஆன்டிஜென்கள்' எனப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.
'ஏ', 'பி' ஆன்டிஜென்கள் மற்றும் ஆர்.எச்., காரணி ஆகியவற்றின் கலவையால், 'ஏ', 'பி', 'ஏபி', 'ஓ', என்ற குழுக்கள், 'நெகட்டிவ்', 'பாசிட்டிவ்' என்ற காரணிகள் அடிப்படையில், ரத்த வகைகள் எட்டாக பிரிக்கப்படுகின்றன.
ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள 'பி(ஏ)' ரத்த வகை என்பது 'ஏ.பி.ஓ.,' மரபணுவின் மாற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த ரத்தத்தில் 'பி' ஆன்டிஜென்களுடன், 'ஏ' ஆன்டிஜென்களின் தன்மை சிறிது இருந்ததால், பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 'பி(ஏ)' ரத்த வகை தோராயமாக ஒரு லட்சத்து 80,000 பேரில் ஒருவருக்கு காணப்படும் ஒரு மரபணு வினோதம் என்று கூறியுள்ளனர்.
அரிய ரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு மாற்று ரத்தத்தை ஏற்ற முடியாது. இதனால் அவசரகாலத்தில் தகுந்த ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே உலக சுகாதார அமைப்பு, ரத்தப் பரிசோதனை முறைகளை மேம்படுத்துவதுடன், உலகளவில் தானம் செய்வோரின் தரவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

