வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி கணிசமாக குறைத்தது கனடா அரசு
வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி கணிசமாக குறைத்தது கனடா அரசு
ADDED : செப் 20, 2024 12:43 AM

டொரன்டோ: கனடாவில், தற்காலிக குடியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில், உயர்கல்வி படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை கணிசமாக குறைத்துள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்தார். இது, இந்திய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று உயர்படிப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வு பட்டியலில், வட அமெரிக்க நாடான கனடா எப்போதுமே முதலிடத்தில் உள்ளது.
உயர்வு
கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் விகிதம், 260 சதவீதம் உயர்ந்துள்ளது.
மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட புள்ளி விபர அறிக்கையில், 'இந்தியாவில் இருந்து, 13.35 லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கின்றனர். இதில், 4.27 லட்சம் மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
'கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள்' என, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை விட, நடப்பாண்டில் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சமூகவலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். இது, அடுத்த ஆண்டு மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'மாணவர்களை தவறான காரியங்களுக்கு சிலர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, தான் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியில் விதிகளை மாற்றியுள்ளோம்' என, தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனம்
கனடாவில் தற்காலிக குடியேற்றத்தை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கை, இந்திய மாணவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ட்ரூடோவுக்கான வெற்றி வாய்ப்பு ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அரசியல் காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனடா குடியேற்றத்துறை அளித்துள்ள புள்ளி விபரங்களின்படி, 5,09,390 வெளிநாட்டு மாணவர்களுக்கு 2023ல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், 4,85,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க கனடா வரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தாண்டின் முதல் ஏழு மாதங்களில், 1,75,920 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய கட்டுப்பாடு காரணமாக, 2025ம் ஆண்டில் மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும் போது, 4,37,000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.