ஈரானில் அரசுக்கு எதிராக போராடி பலியானோர் எண்ணிக்கை 2,000! பயங்கரவாதிகள் மீது பழியை போட்ட உச்ச தலைவர் கமேனி
ஈரானில் அரசுக்கு எதிராக போராடி பலியானோர் எண்ணிக்கை 2,000! பயங்கரவாதிகள் மீது பழியை போட்ட உச்ச தலைவர் கமேனி
ADDED : ஜன 14, 2026 01:29 AM

டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை, 2,000ஐ தாண்டியதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. 'இந்த உயிரிழப்புகளுக்கு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு காரணமில்லை, பயங்கரவாதிகள் மற்றும் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையே காரணம்' என கமேனி அரசு அவர்கள் மேல் பழி போட்டுள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னை, அரசியல் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப் படுத்த, இணைய சேவை முடக்கம், ஊடக கட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
படுகொலை
டிசம்பர் இறுதி வரை பலி எண்ணிக்கை 20 என்ற அளவில் இருந்தது. அதன் பின், படிப்படியாக உயர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் பலி எண்ணிக்கை, 50ஐ கடந்தது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்து 2,000ஐ தாண்டி உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. இதை அமெரிக்க உளவுத்துறையும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எதிர்க் கட்சிகளின் ஆதரவு பெற்ற, ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலை மையிடமாக கொண்டு செயல்படும் 'ஈரான் இன்டர்நேஷனல்' என்ற ஊடக நிறுவனம் 12,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிரான நாடு தழுவிய தொடர் போராட்டங்களில் பாதுகாப்புப் படைகளால், 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஈரானின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை.
இந்தக் கொலைகள் கடந்த 8 மற்றும் 9ம் தேதி இரவு இஸ்லாமிய புரட்சிகர படை மற்றும் பாசிஜ் எனப்படும் துணை ராணுவ படைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டவை. இது தனித்தனியே நடந்தவை அல்ல.
ரகசிய தகவல்
உச்ச தலைவர் அலி கமேனியின் நேரடி உத்தரவின் பேரில், அரசின் மூன்று பிரிவுகளின் தலைவர்களின் ஒப்புதலுடன் நடைபெற்றது. சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சில், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது.
பொது மக்கள் 12,000 பேர் பலியானார்கள் என்ற எண்ணிக்கை ஈரானின் பாதுகாப்பு படையினரின் ரகசிய தகவல்களை அடிப்படையாக கொண்டது. பல ஆதாரங்களை சரிபார்த்து தொகுக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதிபர் அலுவலகத்துடன் நெருக்கமான நபர்கள், இஸ்லாமிய புரட்சிகர படையில் உள்ள நபர்கள், நேரில் கண்ட சாட்சிகள், மருத்துவ அதிகாரிகள், பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டவை.
கட்டுப்பாடு
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள். இணையத் தடை, ஊடக முடக்கம், பத்திரிகையாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், மொபைல் போன் கட்டுப்பாடுகள் ஆகியவை பலி எண்ணிக்கையை மறைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தகவல் பரிமாற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக, உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

