அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் 'நாசா'வையும் விட்டு வைக்கவில்லை
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் 'நாசா'வையும் விட்டு வைக்கவில்லை
ADDED : அக் 04, 2025 01:26 AM

வாஷிங்டன்:அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறவில்லை.
இதையடுத்து அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், பல துறை களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசின் வழிகாட்டுதலின்படி, உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தேவையான அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவை தவிர , சர்வதேச விண்வெளி நிலைய வீரர்களுக்கான பணி, தற்போது இயங்கி கொண்டிருக்கும் விண்கலங்கள் மற் றும் சிறு கோள்கள் கண்காணிப்பு, கோள் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் மட்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசியமற்ற அனைத்து அன்றாட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களில், 15,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், அதிகளவிலான பணி நீக்கங்கள் ஏற்படக்கூடும் என ஊழியர்களிடையே அச்சம் நிலவுகிறது.