ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை
ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை
ADDED : அக் 24, 2025 10:58 PM

பிரஸ்சல்ஸ் : ரஷ்ய ராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்தது. இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இத்தடையை இந்த அமைப்பு நீட்டித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய ராணுவத்தின் இயந்திர கருவிகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுத அமைப்பிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் வகையில், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதையடுத்து, அந்நிறுவனங்களை கண்டறிந்து, அதன்மீதும் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 45 நிறுவனங்களுக்கு தடை விதித்து, அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதில், நம் நாட்டைச் சேர்ந்த, 'ஏரோட்ரஸ்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அசென்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ என்டர்பிரைசஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் அடங்கும். இதுதவிர, இப்பட்டியலில் சீனாவை சேர்ந்த, 12 நிறுவனங்கள், தாய்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
எனினும், இந்நிறுவனங்கள், ரஷ்யாவுடன் எத்தகைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது தொடர்பான விபரங்களை ஐரோப்பிய யூனியன் அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. இதேபோல், இந்நடவடிக்கை பற்றி மத்திய அரசும் தன் கருத்தை தெரிவிக்கவில்லை.

