கனடா விடுதியில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் படுகாயம்
கனடா விடுதியில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் படுகாயம்
ADDED : மார் 08, 2025 12:21 PM

டொராண்டோ: கனடா கேளிக்கை விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
டொராண்டோவில் ஸ்கார்போரோ என்னும் நகரில் கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நுழைந்த மர்மநபர், திடீரென தாம் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்குள்ளோர் சில நொடிகள் குழம்பினர். பின்னர் துப்பாக்கிச்சூடு என்பதை அறிந்து பதறினர்.
இந்த தாக்குதலில் கேளிக்கை விடுதியில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் காரில் அங்கு வந்ததும், பின்னர் அதே காரில் சம்பவ பகுதியில் இருந்து தப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து, தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.