திறமையான புலம்பெயர்ந்தோர்கள் தேவை: எச்1 பி விசாக்களுக்கு டிரம்ப் மீண்டும் ஆதரவு
திறமையான புலம்பெயர்ந்தோர்கள் தேவை: எச்1 பி விசாக்களுக்கு டிரம்ப் மீண்டும் ஆதரவு
ADDED : நவ 20, 2025 08:07 AM

வாஷிங்டன்: அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவதற்கு, திறமையான புலம் பெயர்ந்தோரை அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் என எச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்கா-சவுதி முதலீட்டு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு தேவை. அந்த மக்கள் நம் மக்களுக்கு 'சிப்' எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்றுக்காடுக்க போகிறார்கள்.
மேலும், குறுகிய காலத்தில் நம் மக்கள் சிறப்பாக செயல்பட போகிறார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்கு செல்லலாம். நான் பழமைவாத நண்பர்களை ஆதரிக்கிறேன். நான் அமெரிக்காவை மேலும் சிறந்தது ஆக்க விரும்புகிறேன்.
அமெரிக்காவில் தொழிற்சாலைகளைக் கட்டும் வெளிநாட்டு உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அவர்களுடன் அழைத்து வர வேண்டியிருக்கும், நான் அந்த மக்களை வரவேற்கப் போகிறேன். பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் மக்கள், அந்த ஆலையைத் திறந்து, இயக்க மற்றும் வேலை செய்ய தங்கள் நாட்டிலிருந்து நிறைய பேரை அழைத்து வர அனுமதிக்காவிட்டால், நாங்கள் வெற்றிபெற முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
இந்தக் கருத்துக்கள் அறையில் இருந்தவர்களிடம் கைதட்டலைப் பெற்றன. எச்-1பி விசாக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் தகுதிவாய்ந்த அமெரிக்க குடிமக்கள் நிரப்ப கடினமாக இருக்கும் நிலையில், சிறந்த வெளிநாட்டினரை பணி அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த விசாவுக்கு சமீபத்தில் அதிபர் டிரம்ப் கட்டணத்தை உயர்த்திய நிலையில், புலம்பெயர்ந்தோர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
கடந்த வாரம் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த போது, ''அமெரிக்க மக்களுக்கு திறமையில்லை, மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என கூறி எச்-1பி விசாக்களை விரிவுபடுத்தும் திட்டத்தை தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

