டிரம்ப், புடின் பேச்சுவார்த்தை திடீர் ரத்து; தற்போது சந்திப்பு இல்லை என வெள்ளை மாளிகை அறிவிப்பு
டிரம்ப், புடின் பேச்சுவார்த்தை திடீர் ரத்து; தற்போது சந்திப்பு இல்லை என வெள்ளை மாளிகை அறிவிப்பு
ADDED : அக் 22, 2025 06:45 AM

வாஷிங்டன்; ரஷ்ய அதிபர் புடின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
ஆக.15ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப் சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்ததையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அண்மையில் வாஷிங்டனில் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து புடினை நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவர்களின் சந்திப்பு ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் நடப்பதாக இருந்தது.
இந் நிலையில், திடீரென இந்த சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.
அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இருநாடுகளின் அதிபர்கள் சந்திப்பின் போது உக்ரைனுடனான போர் குறித்து இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. தற்போது பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற டிரம்பின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.