ADDED : மே 20, 2025 04:30 AM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக நேற்று இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தினர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சு குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், “உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராக உள்ளது. அமைதி தீர்வுக்கு ஆதரவாக உள்ளேன்.
“இரு தரப்புக்கும் ஏற்புடைய சமரசங்களை கொண்டுவர வேண்டும். இதுகுறித்த டிரம்புடனான பேச்சு நேர்மையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது,” என்றார்.
முன்னதாக கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில், 2022 மோதலுக்குப் பின் முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சு நடந்தது. அதில், இரு தரப்பும் தலா 1,000 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டன.