பனாமா கால்வாயை எடுத்துக் கொள்வோம்: டிரம்ப் மிரட்டல்
பனாமா கால்வாயை எடுத்துக் கொள்வோம்: டிரம்ப் மிரட்டல்
ADDED : டிச 22, 2024 05:15 PM

வாஷிங்டன்: '' பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.
அட்லாண்டிக் கடலையும், பசுபிக் கடலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். இதனை அமெரிக்கா கடந்த 1914 ல் வடிவமைத்தது. பிறகு, 1999 டிச.,31 அன்று பனாமா நாட்டிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் பனாமா கால்வாய், எங்கள் நாட்டின் தேசியச் சொத்து. அமெரிக்காவின் வர்த்தகம், கடற்படை விரிவாக செல்லுவதற்கும், அமெரிக்க துறைமுகங்களுக்கு பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் இக்கால்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது. இக்கால்வாயை அதிகம் பயன்படுத்தும் நாடு அமெரிக்கா.
நவீன உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கால்வாயை 110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கர்களின் அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டது. கட்டுமானத்தின் போது, வனப்பகுதியில் பலவித பிரச்னைகள் காரணமாக 38 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது மற்றவர்களின் பலன்களுக்காக வழங்கப்படவில்லை. மாறாக அமெரிக்கா - பனாமா இடையே ஒத்துழைப்புக்கான அடையாளமாக வழங்கப்பட்டது. அமெரிக்க கப்பல்கள், கடற்படைக்கு பனாமா வசூலிக்கும் வரி அதிகமானது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அக்கால்வாயை திரும்ப கேட்போம். எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.