'போராடும் மக்களை சுட முயன்றால் காப்பாற்றுவோம்' ஈரான் அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
'போராடும் மக்களை சுட முயன்றால் காப்பாற்றுவோம்' ஈரான் அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 03:27 AM

வாஷிங்டன்: 'ஈரானில், அமைதியான முறையில் போராடுபவர்களை அந்நாட்டு அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி 14.2 லட்சம் ரியாலாக சரிவு கண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தின் போது, அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரான் முழுதும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. லோரெஸ்தான், கோம் போன்ற பகுதிகளில், பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களை தடுக்க, ஒருசில பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் நடக்கும் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவில், 'அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை ஈரான் அரசு கட்டவிழ்த்து விட்டால், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயங்காது என்பதையும் மறைமுகமாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, அவருக்கு ஈரான் அதிபர் மசூத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களின் போராட்டத்திற்கு இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளது.

