ஈரான், அமெரிக்கா மோதல் பிராந்திய நாடுகள் இடையே மோசமான பேரழிவை ஏற்படுத்தும்; எச்சரிக்கும் கத்தார்
ஈரான், அமெரிக்கா மோதல் பிராந்திய நாடுகள் இடையே மோசமான பேரழிவை ஏற்படுத்தும்; எச்சரிக்கும் கத்தார்
ADDED : ஜன 13, 2026 09:25 PM

தோஹா; ஈரான், அமெரிக்க மோதலானது, பிராந்திய நாடுகள் இடையே மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று கத்தார் எச்சரித்துள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. அந்நாட்டின் மீதான பொருளாதார தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக கொந்தளித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் சூழலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
போராடுவோர் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஜனநாயகத்தை கண்டித்து, அந்நாடு மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருக்கிறார். ராணுவ ரீதியான நடவடிக்கைக்கு தயாராவது குறித்து ஆலோசித்து வரும் அவர், ஈரானுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையேயான இந்த மோதல் போக்கிற்கு கத்தார் கவலை தெரிவித்து உள்ளது. மோதல் குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜெத் அல் அன்சாரி கூறியதாவது;
போர் பதற்ற நடவடிக்கைகள் பொதுவாகவே மோசமான சூழல்களை உருவாக்கும். எந்த ஒரு மோதல் வெடித்தாலும் அது பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் பேரழிவுகளை ஏற்படுத்தும்.
எனவே அதை முடிந்தளவு தவிர்க்க விரும்புகிறோம். தூதரக ரீதியில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதில் ஈடுபட்டு இருக்கிறோம். அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுடனும் ராஜதந்திர தீர்வை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜெத் அல் அன்சாரி கூறினார்.

