அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
ADDED : ஜன 23, 2026 09:36 AM

வாஷிங்டன்: கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தனது தலைமையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கி உள்ளார் . இதில் சேர்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . ஆனால் , சீனா இந்த அமைப்பில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது . பிரிட்டன் , பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் சேர்வதை நிறுத்திவைத்துள்ளன.
இந்த சூழலில் உலகளாவிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் டிரம்ப் உருவாக்கிய அமைப்பில் சேருவதற்கு பணம் செலுத்த போவதில்லை என பரபரப்பு தகவலை தெரிவித்து கனடா பிரதமர் மார்க் கார்னி உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். அதேபோல், டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் மார்க் கார்னி விமர்சனம் செய்து பேசியதால் அதிபர் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான விதிகளை அடிப்படையாக கொண்ட உலகளாவிய ஒழுங்கில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
கனடா அமெரிக்காவின் தயவால் வாழவில்லை என கனடா பிரதமர் தெரிவித்தார். இதன் எதிரொலியாக கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவின் இணைவு தொடர்பான அழைப்பை அமைதி வாரியம் திரும்ப பெறுகிறது. இது இதுவரை கூடியிராத மிகவும் மதிப்புமிக்க தலைவர்கள் குழுவாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

