நடுக்கடலில் இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து; 10 மாலுமிகள் மாயம்
நடுக்கடலில் இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து; 10 மாலுமிகள் மாயம்
UPDATED : செப் 02, 2026 02:29 PM
ADDED : செப் 02, 2026 02:28 PM

இஸ்தான்புல்: துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மாலுமிகள் 10 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக இஸ்தான்புல் கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்கரைக்கு அருகில் இன்று அதிகாலை 3 மணியளவில் துருக்கியைச் சேர்ந்த இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கோகோவெலியில் இருந்து அலியகா நோக்கிச் சென்ற 'அல்சு' என்ற சரக்குக் கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற 'துக்பெர்க் இமாமோக்ளு' என்ற சரக்குக் கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் அல்சு என்ற கப்பலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், துக்பெர்க் இமாமோக்ளு கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் 10 பேர் மாயமாகியுள்ளனர்.
கடலோரப் பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருங்கடலை மத்திய தரைக்கடலுடன் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழித்தடமான துருக்கி கடல் பகுதி, வலுவான நீரோட்டங்கள், கூர்மையான திருப்பங்கள் காரணமாக உலகின் மிகவும் சவாலான நீர்வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
