அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்
ADDED : நவ 27, 2025 07:15 AM

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில், மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் சந்தேக நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகைக்கு சற்று தொலைவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இது பற்றி அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நமது மாபெரும் தேசிய காவல்படையையும், நமது ராணுவ மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கடவுள் ஆசீர்வதிப்பார். இவர்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர்கள். அமெரிக்காவின் அதிபராக நானும், உங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்பேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
எப்பிஐ விளக்கம்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரண்டு தேசிய காவல் படை வீரர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என கூறினார். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

