பிலிப்பைன்சில் புயல் பாதிப்பு பலி 126 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்சில் புயல் பாதிப்பு பலி 126 ஆக அதிகரிப்பு
ADDED : அக் 28, 2024 12:20 AM

தலிசே: பிலிப்பைன்சில், 'டிராமி' புயல் தாக்கியதன் எதிரொலியாக கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, டிராமி புயல் சமீபத்தில் தாக்கியது.
இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
கனமழையை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, பலர் சகதிக்கு அடியில் புதைந்ததாக கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.